சென்னை: தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக, எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்து தெரிவித்து இருந்தார், அதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.வி.சேகர் முதல்வர் மற்றும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டார். இது ெதாடர்பாக பா.ஜ நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனால் வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசியக்கொடியை அவமதித்தது மற்றும் முதல்வர் பேச்சுக்கு களங்கம் கற்பித்தது ஆகியவற்றுக்காக வருத்தம் தெரிவித்து எஸ்.வி சேகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவாத மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, உத்தரவு பிறப்பித்தார், அதில் தேவைப்படும் போது காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற கூறி எஸ்.வி சேகருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.