×

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் உதவி ஆய்வாளர் தற்கொலை

சென்னை: கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி(58). பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திரிபுரசுந்தரி(54) என்ற மனைவியும், நித்யா(31) மற்றும் சந்தியா(29) என்ற திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நரசிம்மமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு குடல் தொடர்பான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

பின்னர் நோய் தாக்கத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி அவர் மருத்துவ விடுப்பு எடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அயப்பாக்கம் பிரிட்டானியா நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போதும் அவர் மனைவி மற்றும் மகள்களுக்கு தெரியாமல் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி திரிபுரசுந்தரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், இறந்த உதவி ஆய்வாளர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Assistant investigator ,suicide , Assistant investigator commits suicide after wife condemns drinking alcohol
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை