×

ஐபிஎல் அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்...திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தல்

மும்பை: ஐபிஎல் அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களையே  நியமிக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார்  வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப். 19ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிக வீரர்களும் அபுதாபி, துபாய், ஷார்ஜா நகரங்களில்  முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த 8 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மட்டுமே இந்தியாவை சேர்ந்த முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக  உள்ளார். மற்ற 7 அணிகளுக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே தலைமை பயிற்சியாளர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் வளைகுடா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான வெங்சர்க்கார் கூறியதாவது: ஐபிஎல் அணிகளுக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்களே தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மற்ற உதவி பயிற்சியாளர்கள் பணிகளில் கூட இந்தியர்கள் இல்லை.
இந்தியாவில் திறமையான பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அனுபவமும், கூடுதல் ஆற்றலும் உள்ளவர்கள் என்பதை பலமுறை நிரூபித்து உள்ளனர். எனவே ஐபிஎல் அணிகள் இந்தியாவை சேர்ந்தவர்களை தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் பிக்பாஷ், சிபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும் ஒரு அணிக்கு கூட இந்திய பயிற்சியாளர் கிடையாது. நாம் மட்டும் ஏன் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

 ஒரே ஒரு இந்தியர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல. இந்திய பயிற்சியாளர்களை அதிகம் நியமிக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம். ஐபிஎல் அணி நிர்வாகங்கள்  வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு பதில் உள்நாட்டு பயிற்சியாளர்களை அதிகம் நியமிக்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு வெங்சர்க்கார் கூறியுள்ளார்.



Tags : coaches ,Indian ,teams ,IPL ,Dilip Vengsarkar , Dilip Vengsarkar insists on appointing Indian coaches for IPL teams
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு