×

மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை - காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட வேண்டும்

திருத்துறைப்பூண்டி: மயிலாடுதுறை,திருத் துறைப்பூண்டி வழி யாக சென்னை - காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திருத்துறைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர் டாக்டர் மணிமாறன் ஆகியோர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் கடந்த 2012ம் வருடம் மீட்டர் கேஜ்பாதை அகலரயில் பாதை ஆக மாற்றும் பணியையொட்டி நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில் பாதை பணி ஏழு வருடங்களாக மெதுவாக நடைபெற்று கடந்த 2019ம் ஆண்டு நிறைவடைந்தது. அனைத்து பணிகளும் பூர்த்தியாகியும் அலுவலக பணியான கேட் கீப்பர்கள் நியமிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதற்கு பதிலாக காரைக்குடிக்கு நீண்ட மாற்று வழியான சென்னை-திருச்சி வழியாக ரயில் இயக்க உள்ளதாக தெரியவருகிறது. இது டெல்டா பகுதி பொதுமக்களுக்கு செய்யும் அநீதியாகும். சுமார் 220 கிலோமீட்டர் அதிக நீளம் உள்ள பாதை வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்குவது மக்கள் வரிப்பணத்தின் நஷ்டம் ஏற்படுத்தும் செயலுமாகும். இதனால் காவிரி டெல்டா கடைமடை பகுதி மக்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக சென்னை- காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Mayiladuthurai ,Thiruthuraipoondi ,Chennai ,Karaikudi Kampan Express , Chennai, Karaikudi, Kampan Express
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...