நாமக்கல்: கொல்லிமலையில் நிலத்தை அபகரிக்க முயன்ற இருவர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தாயுடன் விவசாயி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மேக்கினிகாட்டை சேர்ந்த விவசாயி மீனாட்சி (30). இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது மகன் பூபதி ஆகிய இருவரும் அபகரிக்க முயன்றுள்ளனர். இதுதொடர்பாக இருவரும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து மீனாட்சி, எஸ்பி அலுவலகம் மற்றும் செங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த மீனாட்சி, நேற்று தனது தாயார் பூச்சம்மாளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், இருவரும் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கிருந்த போலீசார், உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தி உடம்பில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் இருவரையும் நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தற்கொலைக்கு முயன்றதாக மீனாட்சி, அவரது தாயார் பூச்சம்மாள் இருவர் மீதும் நல்லிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த விவசாயி, தாயுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.