சென்னை: இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமான அறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்ததநாள் (15-09-2020)இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருப்படத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜ், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி உள்ளிட்டவர்களும் அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தனிமனித இடைவெளியை கடைபிடித்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
மு.க.ஸ்டாலின் மரியாதை:
இதனைபோல், பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை-அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் மற்றும் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.