×

மது போதை தகராறில் கடலை வியாபாரி கொலை: நண்பர்கள் 5 பேர் கைது

சென்னை: மது போதை தகராறில் கடலை வியாபாரியை கழுத்தறுத்து படுகொலை செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தி.நகர் நியூ போக் சாலையோரம் உள்ள தண்ணீர் டேங்க் அருகே, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது வலது கையில் சிறிய கத்தி ஒன்றும் இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் மற்றும் தி.நகர் துணை கமிஷனர் ஹரிகரன் பிரசாத் நேரில் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலையானவர் சைதாப்பேட்டை நடைபாதையில் வசித்து வந்த நாராயணமூர்த்தி (35) என்பதும், தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இவர், வழக்கமாக நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 4 பேருடன் தி.நகர் நியூ போக் சாலையில் மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நாராயணமூர்த்தியை நண்பர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் நாகராஜ் (40), பாலாஜி (20), சஞ்சய் (21) மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தி.நகர் நியூ போக் சாலையில் கடலை வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : friends , Alcohol drug, peanut trader, murder, 5 friends, arrested
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...