பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ராகிணி உள்பட 5 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கம் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகிணியின் நண்பர் ரவி சங்கர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலை வைத்து ராகிணி கைதானார். பின்னர் ராகுல், நடிகை சஞ்சனா, லூம் பெப்பர், நியாஷ், வீரேன் கண்ணா, பிரசாந்த் ரங்கா, வைபவ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நடிகைகள், ராகிணி, சஞ்சனாவுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட அரசியல் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் போலீசார் அவர்களின் காவலை நீட்டித்து விசாரிக்க முடிவு செய்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நடிகை ராகிணி, சஞ்சனா உள்பட 6 பேரின் போலீஸ் காவல் நேற்று முடிந்தது. இதையடுத்து, நடிகை ராகிணி உள்பட 5 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி செப்.27ம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஞ்சனாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
* ஜாமீன் மனு ஒத்திவைப்பு
நடிகை ராகிணி, சஞ்சனா உள்பட 6 பேர் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது சி.சி.பி போலீசார் அனைவரையும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிக்கும்படி கூறினர். மேலும் ஜாமீன் வழங்கினால், இவர்கள் சாட்சிகளை அழிக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணையை நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.