×

தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வரம்பு: சிறு, குறு தொழில்களுக்கு 150 கிலோ வாட்டாக அதிகரிப்பு

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

சென்னை: தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வரம்பு தற்போது 150 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார  ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில்களின் துயர் தீர்க்கும் வகையில், தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும்,  தொழில் புரிவோர்க்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட இடர்பாடுகளை களையும் வகையில் தாழ்வழுத்த மின்னிணைப்பு பெறுவதற்கு தற்போது உள்ள  மின்தேவை மேல்வரம்பை 112 கிலோ வாட்டிலிருந்து 150 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை மின்சார  வழங்கல் விதித்தொகுப்பிலும், மின்சார பகிர்மான விதித் தொகுப்பிலும் திருத்தம் அறிவித்துள்ளது.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள், ‘இனிமேல், தொழில் மற்றும் இதர மின் நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பை 150 கிலோ வாட் மின்தேவை  வரையில் பெற்றுக்கொள்ளலாம். 112 கிலோ வாட் மற்றும் அதற்கு குறைவான மின்தேவையுடன் தற்போதுள்ள நுகர்வோர்களுக்கு, ஏற்கனவே  நடைமுறையில் இருக்கும் தாழ்வழுத்த மின் கட்டணங்களும், விதிகளும் தொடரும். 112 கிலோ வாட்டிற்கு மேல் மின்தேவை உள்ள நுகர்வோர்கள்,  தாழ்வழுத்த மின் இணைப்பை, 150 கிலோ வாட் வரை பின்வரும் நிபந்தனைகளுடன் பெற்றுக்கொள்ளலாம். அப்போது தங்கள் வளாகத்திற்குள்  மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தைத் தர வேண்டும்.

உயரழுத்த மின்னிணைப்பிற்குண்டான மின்தேவை மற்றும் மின் நுகர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். மின்மாற்றி அமைப்பதற்குண்டான பொருள்  மற்றும் நிறுவுதல் செலவுகளை மின்வழங்கும் நிறுவனம் ஏற்கும். நுகர்வோர் வளாகத்திற்குள் அமைக்கப்படும் மின்கடத்திகளுக்குண்டான பொருள்  மற்றும் நிறுவுதல் செலவுகளை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட உச்ச மின்தேவையை மீறும் பட்சத்தில், விதிக்கப்படும் அபராதத்  தொகை கொள்கையளவில் 112 கிலோ வாட் வரை உள்ள நுகர்வோர்களுக்கும் 112 கிலோ வாட்டிற்கு மேல் 150 கிலோ வாட் வரை உள்ள  நுகர்வோர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.

150 கிலோ வாட் உச்ச மின்தேவையை மூன்று முறையோ அதற்கும் மேலோ மீறும் பட்சத்தில், தாழ்வழுத்த மின் இணைப்பு உயரழுத்த  மின்னிணைப்பாக மாற்ற நுகர்வோருக்கு அறிவிப்பு வழங்கப்படும். இந்தத் திருத்தம் வருவதற்கு முன், உயரழுத்த மின்னிணைப்பைப் பெற  வசதியில்லாமல், 112 கிலோ வாட் மின்தேவையை மீறி பெரும் தொகையை அபராதமாக கட்டி வந்த நுகர்வோர்கள், இனிமேல் 150 கிலோ வாட் வரை  மின்தேவையை கூடுதலாகப் பெற்று அபராதத்தைத் தவிர்க்கலாம்.

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு நாளிதழில் 1.7.2020 அன்று வெளியிடப்பட்ட திருத்தத்தின் கூடுதல் விபரங்களை தமிழ்நாடு மின்சார  ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் www.tnerc.gov.in காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : enterprises , Limit for availability of low voltage power connection: 150 kW increase for small and micro enterprises
× RELATED நீலகிரி மாவட்டத்தில், ரூ.8.68 கோடி...