சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு வரும் 24ம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.பொறியியல் படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 11, 12 மணி முதல் 1, 2 மணி முதல் 3 மற்றும் 4 மணி முதல் 5 மணி வரை என நான்கு வேளைகளாக நடத்தப்படும். 1 மணி நேரம் நடைபெறும் தேர்வில் கேட்கப்படும் 40 கேள்விகளில் மாணவர்கள் 30 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது.
மேலும் பாடப்பிரிவுகளில் ஏதேனும் 4 தலைப்புகளை படித்தால் போதுமானது. மாதிரி ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 19 மற்றும் 21ம் தேதி நடைபெறும். இதற்கிடையே, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் பருவத்தேர்வுகளை நடத்துவதற்கு அரசிடம் முறையான ஒப்புதல் பெற வேண்டும் என உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.