வாஷிங்டன்: லடாக்கின் கல்வான் எல்லையில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் சீன ராணுவத்தின் முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்ததாக மற்றொரு பயங்கர தாக்குதல் நடத்த சீன அதிபர் ஜின்பிங் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையிலும், சீனா எல்லையில் தொடர்ந்து படைகளை குவித்து அவ்வப்போது அத்துமீறியும் வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூஸ்வீக் வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு அதிபர் ஜின்பிங் தான் காரணம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முயற்சியில் சீன ராணுவம் தோல்வியடைந்தது. இது, பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு, ஜின்பிங்கிற்கு, இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தவும் இந்த தோல்வி தூண்டுவதாக உள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்னையானது பல ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் எந்த அத்துமீறலுக்கும் இந்தியா வாய்ப்பளிக்க தயாராக இல்லை. பல ஆண்டு விதிமுறைகளை மீறியதாக இரு ராணுவமும் மாறி மாறி புகார் கூறிக் கொள்கின்றன. ஆனாலும், சீன ராணுவம் ஒரு உண்மையை உணர்ந்துள்ளது. இந்திய படைகள் தற்போது மிகுந்த வலுவாக எதிர்க்கும் வல்லமையுடன் இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.