கம்பம்: தொடர் மழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே பிரசித்தி பெற்ற சுருளி அருவி உள்ளது. இது சுற்றுலாததலமாக புண்ணிய ஸ்தலமாகவும் திகழ்கிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25 முதல் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து இருப்பதால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்த நிலையில், சுருளி அருவியிலும் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.