ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, நெசவாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட உயர்தொழில்நுட்ப நெசவு பூங்கா திட்டம் பாதியில் நிற்கிறது. இதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் சேலை, வேட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் நெசவாளர்களின் பங்களிப்புடன் ஆண்டிபட்டியில் வைகை உயர்தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
இதற்காக டி.சுப்புலாபுரம் விலக்கில் இடம் தேர்வு செய்யப்பட்டு விசைத்தறி கூடங்கள் கட்டப்பட்டன. ஆனால், அரசு மற்றும் நெசவாளர்களின் நிதி உரிய நேரத்தில் வழங்கப்படாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கட்டப்பட்ட விசைத்தறி கூடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. இக்கட்டிடங்களில் சமூக விரோதச் செயல்கள் நடந்து வருகின்றன. குடித்துவிட்டு காலி மதுப்பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். எனவே, நெசவாளர்களின் கனவு திட்டமான உயர்தொழில்நுட்ப விசைத்தறி பூங்கா திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.