×

திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்: வாலிபர் அதிரடி கைது

திண்டிவனம்: திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் மேற்பார்வையில், திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் தமிழ்மணி, அருள்தாஸ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று மேம்பாலம் அருகே 2 மூட்டைகளை வைத்துக் கொண்டு நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அப்போது சுமார் 75 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் திண்டிவனம் கிடங்கல்-1 முத்துக்கிருஷ்ண முதலி தெருவை சேர்ந்த தனபால் மகன் அரிபிரசாந்த் (26) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்த 75 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Tindivanam , Gutka, arrested
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...