திருவலம்: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த செம்பவராயநெல்லூர் ஊராட்சியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காட்பாடி-திருவலம் சாலையில் இருந்து செம்பவராயநெல்லூர் கிராமத்திற்கு செல்ல பயன்படுத்தும் தார்சாலையானது கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால் பல்வேறு வாகனங்களில் சென்று வர சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயமடைந்து சென்றனர். இதனையடுத்து அப்பகுதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் உள்ள பள்ளங்களில் ஏரிமண்ணை கொட்டி சமன்படுத்தினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நீரானது சாலையில் உள்ள மண்ணில் கலந்து சேறும், சகதியுமாக உருவாகி முற்றிலும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. பொதுமக்களின் இச்சிரமங்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.