கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே எண்ணேகொள்புதூர் பஞ்சாயத்து தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் ஏகநாதன் உள்ளிட்டோர் தென்பெண்ணை ஆற்றில் கற்சிலைகளை இருப்பதை கண்டு, அவற்றை கரையில் எடுத்து வைத்திருந்தனர். இதையடுத்து, வரலாற்றுப் பேராசிரியர் விஷ்வபாரதி அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், செல்வகுமார் மற்றும் வரலாற்று ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கரையில் வைத்திருந்த 3 கற்சிற்பங்களையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய 3 அடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டறியப்பட்டுள்ளது. அக்காலத்தில் சிதிலமடைந்த கோவிலை புதுப்பிக்கும் போது பழைய சிலைகளை ஆற்று தண்ணீரில் விடுவது வழக்கம். அதேபோல் இப்பகுதியில் உள்ள பழமையான பெருமாள் கோயிலை புதுப்பிக்கும்போது சேதமடைந்த இவற்றை ஆற்றில் விட்டிருக்கலாம். பழமையான சிலைகளை இவ்வாறு ஆற்றில் போடுவதால் அக்கோயிலின் வரலாறு தெரியாமல் போகிறது. மாறாக அருங்காட்சியகத்தில் நேரடியாக அளித்தால், அக்கோயிலை ஆய்வு செய்து அதன் வரலாற்றை தெரிந்துக்கொள்ள முடியும். எனவே இது போன்ற சிலைகளை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வரலாற்று ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில், இந்த இடத்தின் அருகே உள்ள பெல்லம்பள்ளியில், 779 ஆண்டுகளுக்கு முந்தைய சோமேஸ்வரர் கோயில் உள்ளது. இது ஒய்சாளப் பேரரசின் இரண்டாம் வீர நரசிம்மன் மகன் வீர சோமேசுவரன் (1235-1254) காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல் சிலை கிடைத்த இடத்தின் அருகே, 350 ஆண்டு பழமை வாய்ந்த மத்வபிருந்தாவனம் இடிந்த நிலையில் இருப்பதால், தற்போது, கண்டறியப்பட்ட சிலைகள், இவ்விடத்தின் அருகே இருந்த பெருமாள் கோவில் சிலைகளாக இருக்கலாம் என்றார்.