×

அமெரிக்க மேற்கு பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால் 30.20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகின: பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒருமாத காலமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 30.20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது,மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் பரவி வரும் பெரும் தீ காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருளில் தவித்து வருகின்றனர். கொளுந்து விட்டு எரியும் நெருப்பு காரணமாக கலிபோர்னியாவின் பெரும்பகுதியில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

கலிபோர்னியா மாகாணத்தில் 28 இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கலிபோர்னியாவில் பற்றிய நெருப்பு அங்கிருந்து ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களுக்கும் பரவியுள்ளது. ஒரேகான் மாகாணத்தில் இதுவரை 10 லட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி உள்ளது. ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீயால் 5 சிறிய நகரங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் கேட் பிரவுன் தெரிவித்துள்ளார்.மேலும் நெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதி காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று வாஷிங்டன் மாகாணத்தில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் சுமார் 2 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசமாகிவிட்டதாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.காட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாகாணத்தில் மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஒரேகான் மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கனவே ஒருவர் காட்டுத்தீக்கு பலியான நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் வாஷிங்டன் மாகாணத்தில் நேற்று முன்தினம் 1 வயதான பச்சிளம் குழந்தை காட்டுத்தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதன் மூலம் மேற்குத் கடற்கரையோர மாகாணங்களில் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மிக தீவிரமாக போராடி வருகின்றனர்.

Tags : forest ,US , USA, Wildfire
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ