பூந்தமல்லி: திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் பகுதி முட்புதரில் வாலிபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார் (23). ரவுடி. என்பது தெரியவந்தது. மேலும், நேற்று முன்தினம் மது அருந்துவதற்காக சிலர் அவரை அழைத்து சென்றபோது ஏற்பட்ட தகராறில் அஜித்குமாரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், போலீசார் இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த லால் (எ) பிரகாஷ் (24), ஆகாஷ் (22), குணசேகரன் (20), காத்தவராயன் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கும், அஜித்குமாருக்கும் இடையே அந்த பகுதியில் யார் பெரிய ரவுடி என்ற போட்டியில் தகராறு ஏற்பட்டு முன்விரோதமானது. மேலும், கஞ்சா விற்பது தொடர்பாக தொழில் போட்டியும் இருந்தது. இதையடுத்து அஜீத்குமாரை வளரவிட்டால் தங்களுக்கு ஆபத்து என 4 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி நேற்று முன்தினம் அவரை கஞ்சா விற்பது தொடர்பாக பேச அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது.