திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த கல்லூர் கிராமத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று வந்திருந்தார். அங்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி கிராம மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது வீட்டின் முன் நோ- நீட் என எழுதப்பட்ட வாசகத்துடன் கோலமிட்டனர். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறுகையில், ‘நீட் தேர்வு மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் தேர்வுக்கு முன்னரே தற்கொலை செய்து கொள்கின்றனர். மோடி அரசு பிடிவாதம் செய்யாமல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது’ என்றார்.