டெல்லி: நாடு முழுவதும் 85-90% மாணவர்கள் நீட் தேர்வை எழுதியதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களிலும், தமிழகத்தில் 240 மையங்களிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் திருச்சி, சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட 14 நகரங்களில் 240 தேர்வு மையங்களில் இத்தேர்வை 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் இன்று எழுதுகின்றனர். இந்தியா முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர்.
இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பொக்கிரியால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; இன்று நடைபெற்ற நீட் தேர்வில் 85-90 சதவீத மாணவர்கள் பங்கேற்றதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்களுக்காக சரியான ஏற்பாடுகள் செய்து ஒத்துழைப்பு தந்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நன்றி. நீட் தேர்வில் இவ்வளவு சதவீதம் மாணவர்கள் பங்கேற்று இருப்பது இளைஞர்களின் உறுதியையும் மன நிலையையும் பிரதிபலிக்கிறது என கூறினார்.