×

சின்னசேலம், கல்வராயன்மலையில் கனமழை மக்காச்சோளம், மரவள்ளி பயிர்கள் அமோக விளைச்சல்

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை தாலுகா, சின்னசேலம் தாலுகாவிலும் கடந்த ஒரு வார காலமாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கல்வராயன்
மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்வராயன்மலையில் மலை முழுவதிலும் விவசாயிகள் சுமார் 2,000 ஏக்கரில் மானாவாரி மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்கள் மழையை நம்பியே வளர்கிறது. இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலை கிராமங்களில் பயிரிட்டுள்ள மரவள்ளி தற்போது செழித்து வளர்கிறது. இதனால் மலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதைப்போல சின்னசேலம் தாலுகாவை பொறுத்த வரையில் மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக சின்னசேலம் தாலுகாவில் சுமார் 1000 ஏக்கரில் மக்காச்சோளமும், சுமார் 400 ஏக்கரில் பருத்தியும், சுமார் 250 ஏக்கரில் மரவள்ளியும் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களும் பெரும்பாலும் மழையை நம்பியே இருந்தது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியிலும் கடந்த 4 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட செடிகள் செழித்து வளர்கிறது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விவசாயிகள் அதிக லாபம் அடைவார்கள் என வேளாண்மைத்துறை தெரிவிக்கிறது.


Tags : Chinnasalem , Chinnasalem, Kalvarayanmalai, heavy rain maize, cassava crops
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...