திருமலை: ஆந்திரா, ஒடிசா மாநில எல்லை வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாகி இருப்பதால், இரு மாநில போலீசாரும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆந்திரா- ஒடிசா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இரு மாநில போலீசாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். 2 தினங்களுக்கு முன்பு போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். இதனால், இருமாநில எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து, நக்சல்கள் நடமாட்டம் உள்ள ஒடிசா மாநிலம் சித்ரகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லூரி கோட்டா, பப்புலூரு, கப்பதோட்டி, குர்மனூர், ஆந்திராவில் கும்மிரேவுலா, பதகோட்டா, சீலெரு குடென்கோட்டவீதி உள்ளிட்ட மலை கிராமங்களில் இரு மாநில போலீசாரும் ஹெலிகாப்டரில் பறந்தபடியே கண்காணித்து வருகின்றனர்.