ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதுகுடியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (47), புதிய தமிழகம் கட்சி மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன், கட்சி கொடியேற்றுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் நடந்தது. இதில், தேசிகாபுரத்தை சேர்ந்த முன்னாள் நாட்டாமை தங்கவேல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் ராஜலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
நேற்று காலை ராஜலிங்கம் தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேேய ராஜலிங்கம் இறந்தார். இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி முதுகுடி மெயின்ரோடு மற்றும் தென்காசி சாலையில் உறவினர்கள் மறியல் செய்தனர். அவர்களுடன் எஸ்பி பெருமாள் பேச்சு நடத்தினார். எனினும் மறியல் தொடர்ந்தது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.