பாட்னா: பீகார் மாநிலத்தில் நவம்பர் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில், பாஜ.வும் இணைந்துள்ளது. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தற்போது, தொகுதி பங்கீடு மற்றும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக லோக் ஜனசக்திக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பாட்னாவில் நேற்று, பாஜ தலைவர் ஜேபி நட்டாவும், நிதிஷ் குமாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.