×

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் 18 திமுக எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட புதிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு: விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21  திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் 2017ம் ஆண்டு குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர். இதுதொடர்பாக பேரவை தலைவர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்களும் 2017ம் ஆண்டு செப்டம்பர் 7ல் வழக்கு தொடர்ந்தனர். ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்த நிலையில், மற்றவர்கள் மீதான வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி  அமர்வு விசாரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில் 2017ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், பேரவை உரிமைக்குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் கருத்துக்களை அக்குழுவிடம் முன்வைக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு இரண்டாவது முறையாக செப்டம்பர் 7ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. அதன்முடிவில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்க உள்ள செப்டம்பர் 14ம் தேதியன்று பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் மனுவில், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களை பங்கேற்க விடாமல் தடுக்கப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாக கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதை தடுக்கும் வகையில் உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

கடந்த 19.07.2017 அன்று சட்டப்பேரவையில் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.08.2020 அன்று, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 07.09.2020 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, 19.07.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14.09.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது. எனவே, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத்  தாக்கல் செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புது நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா விவகாரத்தை எழுப்புவதை தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

Tags : MK Stalin ,DMK , MK Stalin's case against new notice issued to 18 DMK MLAs
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...