×

ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா உட்பட 4 பேர் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். சங்கரின் சகோதரி மகன் மோகனிடம் நடத்திய விசாரணையில் சிபிசிஐடி பல தகவலை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வாளர் நடராஜன், எஸ்.ஐ ராஜா உட்பட காவலர்கள் 11 பேரிடம் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரவுடி சங்கரை கஞ்சா வழக்கில் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து, அதனை எடுத்து செல்லும்போது திடீரென ரவுடி சங்கர் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நடத்திய தற்காப்பு தாக்குதலில் என்கவுண்டர் செய்யப்பட்டகாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் 3 குண்டுகளால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போலீஸ் திட்டமிட்டு தாக்கி சங்கரை கொலை செய்து விட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில், சங்கரின் தாயார் மனு ஒன்றும் அளித்திருந்தார். அதில், தனது மகனை திட்டமிட்டு போலீசார் கொலை செய்துவிட்டு என்கவுண்டர் என்ற பெயரில் நாடகமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என கோரி, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Rowdy Shankar ,CPCIT , Rowdy Shankar, Encounter Case, CBCID
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை