கொடைக்கானல்: பிரையன்ட் பூங்காவை வயதானவர்களும், குழந்தைகளும் சுற்றிப்பார்க்க பேட்டரி கார்கள் இயக்கப்படும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கொடைக்கானலில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில் வயதானவர்களும், குழந்தைகளும் சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் இயக்கப்படும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பூங்கா முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பூங்காவில் மலர் படுக்கைகளை 200 ஆக விரிவாக்கம் செய்யவும், மாலை நேரங்களில் பூங்காவை ஒரு மணி நேரம் கூடுதலாக திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோஜாப் பூங்கா, செட்டியார் பூங்கா, பிரையண்ட் பூங்கா ஆகியவற்றில் சுமார் 500 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்’ என்றார்.