குன்னூர்: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் மளிகை பொருட்கள் பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கோவையில் இருந்து ஊட்டிக்கு நள்ளிரவில் மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. லாரியை குன்னூரை சேர்ந்த சரவணன் (40) என்பவர் ஓட்டி வந்தார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வந்தபோது, முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல ஓட்டுநர் முயன்றார். அப்போது, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுநர் சரவணன் காயமடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலை ரயில் தண்டவாளத்தில் லாரி விழுந்ததால் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான லாரியில் இருந்த மளிகை பொருட்கள் வேறு லாரிக்கு மாற்றப்பட்டது. இவ்விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.