பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 63வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. முதலாவதாக இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி உள்ளிட்ட குடும்பத்தார் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அதிமுக சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்பிக்கள் பவானி ராஜேந்திரன், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தென்மண்டல ஜஜி முருகன் தலைமையில், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், எஸ்பி கார்த்திக் கண்காணிப்பில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 6 ட்ரோன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடந்த நிகழ்ச்சியில் இமானுவேல் சேகரன் உருவ படத்துக்கு தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் மலரஞ்சலி செலுத்தினார்.