×

சொப்னாவிடம் இருந்து 18 கிலோ தங்கத்தை வாங்கிய கோவை நகைப்பட்டறை அதிபர்: என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவை: கோவை நகைப்பட்டறை அதிபர் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா சுரேசிடம் இருந்து 18 கிலோ தங்கத்தை பெற்று  ஆபரணமாக மாற்றியது என்.ஐ.ஏ. விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ₹15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சொப்னா சுரேஷ், சரித், சந்தீப்நாயர், பைசல்  பேரத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சொப்னா சுரேசுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல்களை சேகரித்து  வந்தனர். விசாரணையின்போது, கோவையை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் நந்தகோபால் என்பவர் தங்க கட்டிகளை வாங்கி ஆபரணமாக செய்து  கொடுத்தது தெரியவந்தது.

அதன்படி, கொச்சின் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இருந்து கடந்த புதன்கிழமை என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். அவர்கள் டி.கே. மார்க்கெட்  பின்புறம் உள்ள பவிழம் வீதியில் உள்ள நகைப்பட்டறை அதிபர் நந்தகோபால் (42) வீட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை சோதனை  செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நந்தகோபாலுக்கு ஹவாலா மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர். சோதனை முடிவில், வீட்டில் இருந்து  பல்வேறு ஆவணங்கள், ₹3 லட்சம் ரொக்கம், 32 பவுன் நகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக கொச்சின்  என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நந்தகோபாலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல  திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சொப்னா சுரேஷ், தங்க கடத்தல் கும்பலிடம் இருந்து 18 கிலோ தங்கத்தை நந்தகோபால் பெற்று அதனை தங்க நகையாக வடிவமைத்து விற்றது  தெரியவந்துள்ளது. தங்க கடத்தல் கும்பலுடன் அவருக்கு எத்தனை ஆண்டுகளாக தொடர்பு இருக்கிறது? கோவையில் உள்ள நகைப்பட்டறை அதிபர்கள்  வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடக்கிறது. அப்படி யாருக்காவது தொடர்பு இருக்கும் தகவல் தெரியவரும் பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் கோவையில் முகாமிட்டு சோதனையில்  ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நந்தகோபாலிடம் தொடர்ந்து 3வது நாளாக கொச்சின் என்.ஐ.ஏ அலுவலகத்தில் நேற்று விசாரணை  நடந்துள்ளது. முழுமையான விசாரணை முடிவில்தான், நந்தகோபால் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்.கோவையில் உள்ள நகைப்பட்டறை  அதிபர்கள் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடக்கிறது.



Tags : Coimbatore ,jewelery shop owner ,trial ,NIA Startling , From Sopna Purchased 18 kg of gold Coimbatore Comedian President: NIA Startling information at trial
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்