×

புதிய பொதுச் செயலாளர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் காங்கிரசில் அதிரடி மாற்றம்: தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் அமைப்பில் அதிரடி மாற்றங்களை சோனியா காந்தி நேற்று செய்தார். இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளாராக பதவி வகித்த முகுல் வாஸ்னிக் மாற்றப்பட்டு, தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.காங்கிரசில் தலைமை மாற்றம் பற்றி சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இடைக்கால தலைவராக உள்ள சோனியாவுக்கு பதிலாக, முழு நேர தலைவரை தேர்ந்தெடுக்கும்படி கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விவாதிக்க காரியக் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டது. அதில், கட்சி உள்விவகாரங்களை பொதுவெளியில் பேச தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், குலாம் நபி ஆசாத், கபில்சிபல் போன்ற தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வந்தனர். இந்நிலையில், கட்சி அமைப்பில் சோனியா காந்தி நேற்றிரவு அதிரடி மாற்றங்களை செய்தார். இதில், மூத்த தலைவர்கள் பலர் மாற்றப்பட்டு, புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாநில மேலிட பொறுப்பாளர்களும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, மோதிலால் வோரா, மல்லிகார்ஜுன கார்கே, லுசினோ பெலைரோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் புதிய பொதுச் செயலாளர்களாக முகுல் வாஸ்னிக், ஹரிஸ் ராவத், உம்மன் சாண்டி, தாரிக் அன்வர், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதேந்திர சிங், அஜய் மகான், கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையே, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீவு, உத்தர பிரதேசம், கர்நாடகா, அசாம், ராஜஸ்தான் மாநிலமேலிட பொறுப்பாளர்கள் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. கே.சி.வேணுகோபாலுக்கு கட்சி அமைப்பின் மேலிட பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரியக் கமிட்டியின் உறுப்பினர்களாக 22 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சோனிய காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த சர்மா, ஹரிஷ் ராவத், கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக், உம்மன் சாண்டி, அஜய் மகான், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், ஜிதேந்திர சிங், தாரிக்  அன்வர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ரகுவீர் சிங் மீனா, தருண் கோகாய் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மேலிட பார்வையாளர் பொறுப்பில் இருந்து முகுல் வாஸ்னிக் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பியும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான மாணிக்கம் தாகூர், தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான டாக்டர்.செல்லக்குமார், ஒடிசா மாநில மேலிட பொறுப்பளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி, மத்திய தேர்தல் பணிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : General Secretaries ,Working Committee Members Action ,Congress ,Tamil Nadu ,Dinesh Kundu Rao , Appointment of new General Secretaries and Working Committee Members Action change in Congress: Dinesh Kundu Rao in charge of Tamil Nadu
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...