திருச்சுழி : திருச்சுழி, நரிக்குடி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக சரிவர மழை பொய்த்ததால் விவசாய நிலங்களை பராமரிக்கமல் விட்டதால் கருவேலம் முட்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் மான்,மயில்,முயல்,காட்டுபன்றி என ஏராளமான வனவிலங்குகள் இனபெருக்கமாகி அதிகளவில் காணப்படுகின்றன.தற்போது திருச்சுழி,நரிக்குடி பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்களை அழித்து சோலார் மின்நிலையம் அமைத்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் இடமாறி நரிக்குடி பகுதியில் உள்ள மறைக்குளம், நாலுர், குறவைக்குளம், அழகாபுரி, சீனிமடை, உலக்குடி பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளன. பலன்தரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் கடலை செடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இப்பகுதியில் செவல் மண் என்பதால் கடலை விவசாயம் செய்தால் அதிக மகசூல் கிடைக்குமென விவசாயிகள் பெரும்பாலனோர் கடலை சாகுபடி செய்கின்றனர். தற்போது அதிகளவு மழை பெய்யும் என நம்பி பல நூறு ஏக்கரில் கடலை பயிரிட்டு வருகின்றனர்.
ஓரளவிற்கு மழை பெய்துள்ளதால் விவசாயம் செழித்து, ஓரளவிற்கு வளர்ந்து காணப்படும் நிலையில் காட்டு பன்றிகள் மற்றும் விலங்குகள் கடலை செடிகளை கிளறி வீணடிக்கின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வதாரம் தடுமாறுவதோடு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து விவசாயி அசோக் கூறுகையில், எங்கள் கிராமப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் வனவிலங்குகள் நடமாடி வருகின்றன. தற்போது விவசாய நிலங்களில் நெல்,கடலை,உளுந்து என பல பயிர்கள் பயிரிட்டுள்ளோம். கடலை வளர்ந்து காணப்படும் நிலையில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகளவில் உள்ளன. கடலைச் செடிகளை பறித்து நாசம் செய்கிறது. கடலைச் செடிகளை பாதுகாக்க காட்டிலே குடியிருக்க வேண்டியிருக்கிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், விவசாயத்தை காக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.