கும்மிடிப்பூண்டி: புதுவாயல் ஏரியில் மண்குவாரி செயல்பட எதிர்ப்புதெரிவித்து 3வது முறையாக நேற்று புதுவாயல் சாலையில் மக்கள் போராட்டம் நடத்தினர். புதுவாயல் ஊராட்சியில் உள்ள ஏரியில் அரசு அனுமதி பெற்று மண்குவாரி பணிகளை தனியார் நிறுவனம் போலீசார் பாதுகாப்புடன் தொடங்க வந்தனர். இதையறிந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுவாயல் சாலையில் குவிந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசாரிடம் பொதுமக்கள் ஏற்கனவே இந்த ஏரியில் 2 முறை குவாரி செயல்பட்டு ஏரியில் எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் உருவாகிய நிலையில் மீண்டும் குவாரி செயல்பட்டால் நீர் வளம் அழிந்துவிடும்.
மேலும் ஏரி உள்ள பகுதியில் 85 ஏக்கர் பரப்பில் அரசின் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ள நிலையில் இந்த குவாரி நடத்தினால் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கிய இடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும், அத்தோடு புதுவாயல் ஊராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட இரு ஆழ்துளை கிணறுகள் ஏரிக்கரையோரம் உள்ள நிலையில் குவாரி செயல்பட்டால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மண்குவாரி அமைக்க வந்த பொக்லைன் இயந்திரங்களை நிறுத்த புதுவாயல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் சம்பவ இடத்திற்கு சென்றபோது போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதை அறிந்த பொதுமக்கள் புதுவாயல் திருப்புமுனையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என எச்சரித்தார்.
அதைத் தொடர்ந்து ஊர் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையின்போது கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் மண் குவாரி அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். நீங்கள் முறையாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள் என எடுத்துரைத்தார். அத்தோடு தற்காலிகமாக மண் குவாரி நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.