×

கல்லூரி மாணவியுடன் கணவர் ஓட்டம் 2 மகன்களை எரித்து கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வல்லம்பக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்து (45). விவசாயி. இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு அபிஷேக் (13) 8ம் வகுப்பு, அபிரித் (9) 4ம் வகுப்பு படிக்கும் மகன்கள் இருந்தனர். அறந்தாங்கி ரெத்தினகோட்டையை சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவியுடன் முத்து நெருங்கி பழகி வந்துள்ளார். இதை மனைவி கண்டித்துள்ளார். மாணவியின் பெற்றோரும் முத்துவை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை முத்து, மாணவியை அழைத்துக் கொண்டு  ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், அறந்தாங்கி போலீசார் முத்து மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதற்கிடையே, தனது கணவர், மாணவியுடன் ஓடியதால் அவமானம் தாங்கமுடியாமல் ராதா மனமுடைந்தார்.

இதே வேதனையில், நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் 2மகன்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை 2 பேர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், ராதாவும், அபிரித்தும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அபிஷேக் மற்றும் இவர்களை காப்பாற்ற முயன்று காயம் அடைந்த ஆனந்த், சத்தியமூர்த்தி ஆகியோரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்களில், அபிஷேக் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தான். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : sons ,college student ,suicide ,death mother , College student, husband run, 2 son, burnt to death, mother set on fire, commits suicide
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி