பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான ரகுவன்ஸ் பிரசாத் சிங் திடீரென விலகி இருக்கிறார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதன் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் செயல்பட்டு வருகிறது. கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், இக்கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ரகுவன்ஸ் பிரசாத் சிங் நேற்று திடீரென அறிவித்தார். இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் பல இலாகாக்களில் பதவி வகித்தவர். பீகாரில் டிசம்பருக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கூட்டணி முயற்சியில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து ரகுவன்ஸ் விலகியது, அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.