×

கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு முறையான திட்டத்துடன் போரிட்டு வருகிறது; அமித்ஷா பெருமிதம்

குஜராத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக முறையான திட்டமிடலுடன் போரிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ரூ.134 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றானது, இதுவரை நாம் சந்தித்திராத சவால் என்றார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நன்கு திட்டமிட்ட முறையில் அதனை எதிர்த்து போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் முயற்சிகளை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அதேநேரத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸின் தாக்கம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் வேகத்தைக் குறைத்திருந்தாலும், குஜராத்தையோ அல்லது இந்தியாவின் வளர்ச்சியையோ அது நீண்ட காலம் தடுத்து நிறுத்த முடியாது என்றும்  அமித் ஷா தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில்தான் அதிலிருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,Amitsha , Corona, Central Government, Amitsha
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...