டெல்லி : பிரிட்டனை தொடர்ந்து இந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனையை ஏன் நிறுத்தக் கூடாது என்று சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிரிட்டனின் ஆஸ்திரா செனெகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனையில் எதிர்மறை விளைவுகளை தந்தது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வரும் சீரம் நிறுவனம் முதற்கட்ட பரிசோதனையை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பிரிட்டன் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது பற்றி ஏன் தெரிவிக்கவில்லை என்று சீரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்துதரக் கட்டுப்பாட்டு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிசோதனையில் எதிர்மறை விளைவு ஏற்பட்டுள்ள சூழலில் கோவிஷீல்டு தடுப்பூசி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனைக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என்றும் சீரம் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் பிரிட்டனை தொடர்ந்து இந்தியாவிலும் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.