அம்பத்தூர்: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மூதாட்டியை வழிமறித்து 5 சவரன் தங்க சங்கிலியை பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 17வது தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி ஷோபா (60). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஷோபா வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இவர், வீட்டு அருகே வந்த போது ஒரே பைக்கில் வந்த இருவர் இவரை வழிமறித்து உள்ளனர்.
பின்னர், அவர்களில் ஒருவன் இறங்கி வந்து ஷோபா கழுத்தில் கிடந்த 5சவரன் தங்க சங்கிலியை பறித்து உள்ளான். உடனே அவர் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து உள்ளார். இவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் ஒடி வந்தனர். ஆனால், அதற்குள் மர்ம நபர் தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டனர். புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.