ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் போலீசார், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊத்துக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட தாராட்சி, பாலவாக்கம், லச்சிவாக்கம், பேரண்டூர், செஞ்சியகரம், பனப்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சிசிடிவி கேமரா அமைப்பது குறித்து காவல் துறை மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமை தாங்கினார். கூட்டத்தில், ‘ஒரு ஊராட்சியில் 2 அல்லது 3 கிராமங்கள் உள்ளன.
இதில், ஒரு கிராமத்தில் திருட்டு, மணல் கடத்தல் ஆகியவைகளை தடுக்க 5 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கிராமங்களில் ஒரு வீட்டில் தாய், தந்தை என 2 பேரும் வேலைக்கு சென்றால் அந்த வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். கிராமங்களில் சிசிடிவி பொருத்துவதால் பெண்கள் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது, சாலையில் நடந்து சென்றால் மர்ம நபர்கள் நகை பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டால் அது தெரிந்து விடும்’ என்றனர்.