×

தங்கம் கடத்தல் சம்பவத்தில் தொடர்பா? பினீஷ் கோடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: கேரள அரசியலில் பெரும் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில், கேரள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கோடியேரியிடம் நேற்று மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் 2வது மகன் பினீஷ் கோடியேரி. இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பெங்களூரு, சென்னை உட்பட பல இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கேரளாவில் பிரபலமாக பேசப்படும் குற்றச்சம்பவங்களில் பினீஷ் கோடியேரி பெயரும் அடிபடுவது உண்டு. சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டது.

இதில் கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவை  சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முகமது அனுபுக்கும், பினீஷ் கோடியேரிக்கும் தொடர்பு உள்ளது. தெரியவந்தது. இதனால், பினீஷிடம் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ், பாஜ உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன இதற்கிடையே திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சொப்னாவின் வங்கி லாக்கரில் சோதனை நடத்தியபோது, ஒரு கிலோவுக்கும் மேல் நகைகள் மற்றும் ஒருகோடிக்கும் மேல் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தின.

கேரளாவில் ‘லைப் மிஷன்’ என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ், ் வடக்கான்சேரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக துபாயை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ20 கோடி அன்பளிப்பாக கொடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்திருந்தது. இந்த நிறுவனம் தந்த கமிஷன் தொகையைத்தான் லாக்கரில் வைத்திருந்ததாக சொப்னா கூறியிருந்தார். மேலும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் விசா ஸ்டாம்பிங் செய்யும் பணியை குத்தகை எடுத்த சில நிறுவனங்களும் தனக்கு கமிஷன்கொடுத்ததாக கூறினார்.

இதில் ஒரு நிறுவனத்தில் பினீஷ் கோடியேரிக்கும் முதலீடு இருப்பதாக அமலாக்கத்துறை க்கு தெரிந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக, நேற்று ஆஜராகும்படி, நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் 17ம் தேதி வரை அவகாசம் கேட்டதை அமலாக்கத்துறை நிராகரித்தது. இதையடுத்து, பினீஷ் கோடியேறி நேற்று காலை 10 மணிக்கு கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரவு வரை தொடர்ந்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Tags : smuggling incident ,Kerala ,Pinesh Kodiyeri ,arrest , Gold smuggling, Bineesh Kodiyeri, investigation
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...