×

விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்கள் முயற்சிக்கும்போது குறுக்கிடும் ஆபாச இணையதளங்களால் மாணவர்களின் கவனம் திசைமாறிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையில் வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இதேபோல, விமல்மோகன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’’ என தெரிவித்து இருந்தார். மேலும், பரணிதரன் என்பவரும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பிரபாகரன் மற்றும் வக்கீல் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் ஆஜரானார். அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கான கால அளவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற ஆபாச தளங்கள் வராத வகையில் பார்த்துக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கலந்துரையாடல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவு, தேர்வுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஆரம்ப கல்விக்கான முன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாநில அரசு தமிழில் மொழிபெயர்த்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வழிகாட்டுதல்களை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் தரப்பட வேண்டும். போலீசார் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூக நல கூடங்களில் வகுப்பு
* கொரோனா காரணமாக தொழில்நுட்பம் சார்ந்த புது வகையான கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த தொழில்நுட்ப கல்வியை எட்ட முடியாது.
* ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள போதுமான மொபைல்கள் இல்லாமலும், இணையதள இணைப்பும் இல்லாமலும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கல்வி நிறுவனங்கள் நேரில் ஆய்வு செய்து குறைகளை கண்டறிய வேண்டும்.
* ஆன்லைன் வகுப்புகளில் வருகைப்பதிவு, தேர்வு, குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமான நேரத்துக்கு வகுப்புகள் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
* அரசு பள்ளிகளை பொறுத்தவரை, வகுப்புகளை சமூக நலக் கூடங்களில் நடத்தலாம். மாணவர்களால், இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாவிட்டால், தனிமனித விலகலை பின்பற்றி அவர்களை வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்யும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
* மாணவர்கள் வகுப்புகளை தவற விடக் கூடாது என்பதால், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் காலி வகுப்பறைகளையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags : schools ,Chennai High Court , Schools violating the rules, stern action, online class, no ban, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...