தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் ஆண்குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி சங்கரன்கோவில் இரயில்வே ரோட்டில் உள்ள திரையரங்கு ஒன்றின் வளாகத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறிய தீ எரித்துக்கொண்டிருப்பதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டுள்ளனர். பின்னர், அருகில் சென்று பார்த்தபோது பச்சிளம் குழந்தை எரிந்து கொண்டிருப்பதை கண்டு அவர்கள் பேரதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையிலான சங்கரன்கோவில் போலீசார் குழந்தையை எரித்து கொன்றது யார்? என விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணையில் முறையற்ற உறவு காரணமாக குழந்தை பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குழந்தை எரித்து கொல்லப்பட்டதா? அல்லது குழந்தை கடத்தப்பட்டு எரித்து கொல்லப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிறந்து 4 நாட்களே ஆன நிலையில் குழந்தை எரித்து கொல்லப்பட்டது சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.