×

பக்தர்களின்றி கொடியிறக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய திருவிழா நிறைவு

நாகை: கொரோனாவால் பக்தர்களின்றி நேற்று இரவு கொடியிறக்கத்துடன் வேளாங்கண்ணி பேராலய திரு விழா நிறைவு பெற்றது. உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெறும். உலகின் பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பர். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்றுமுன்தினம் பக்தர்களின்றி நடந்தது.

அன்னையின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அன்னையின் கொடியிறக்கம் நடந்தது. கலெக்டர் பிரவீன் பி நாயர், எஸ்பி செல்வநாகரெத்தினம், பேராலய அதிபர் பிராபகர் மற்றும் பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பேராலயத்தில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு தொடர்ந்து தமிழில் திருப்பலி நடந்தது. பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலய விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.

Tags : Velankanni Cathedral Festival ,devotees ,Festival ,Velankanni , Velankanni, Festival
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்