சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறை, மாவட்ட சிறை, கிளைச்சிறை என 136 சிறைகளிலும் கைதிகளை பார்க்க தடை செய்யப்பட்டது. இதனால் அவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். இதையடுத்து சென்னை புழல், கோவை, மதுரை, வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் செல்போன் வீடியோ காலில் பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரம் கைதிகள் உறவினர்களுடன் பேசிவந்தனர். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கிளை சிறை கைதிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இன்று(9ம் தேதி) முதல் கிளைச்சிறைகளில் கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வழக்கம் போல் கிளைச் சிறைகளில் கைதிகளை பார்க்கலாம்.