கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கவுந்தப்பாடியில் ரூ.10 கோடி மதிப்பிலான குடிநீர் திட்ட பணிகளின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திட்ட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கோயம்பேட்டில் மட்டுமே குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் காற்று மாசு கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது. சுற்றுச்சூழல் திருத்த சட்டம் 2020 குறித்து முதலமைச்சர் குழு அமைத்துள்ளார். அந்த குழு ஆய்வு செய்து வழங்கும் அறிக்கையை பெற்று முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் விலைவாசி கணிசமாக குறைந்து இருப்பதால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.