பெரம்பூர்: புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42), பெயின்டர். இவர், கடந்த 3ம் தேதி மாலை ஓட்டேரி காமராஜர் தெருவை சேர்ந்த நண்பர் காட்டுராஜாவுடன் (46), மது அருந்திவிட்டு ஓட்டேரி செல்லப்பா தெரு போலீஸ் பூத் அருகே கூலி பிரிப்பது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த காட்டுராஜா அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து ராமச்சந்திரன் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த ராமச்சந்திரனை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓட்டேரி போலீசார் காட்டுராஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.