×

சிஆர்பிஎப் துணை கமாண்டன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பூந்தமல்லியில் பரபரப்பு

சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் சிஆர்பிஎப் துணை கமாண்டன்ட் ஒருவர் பணியின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பூந்தமல்லி, கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை 77வது பட்டாலியன் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு துணை கமாண்டன்டாக பணி புரிந்து வந்தவர் ஸ்ரீஜன் (50). கேரள மாநிலத்தை சேர்ந்தவர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஸ்ரீஜன், ரைபிள் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு அவரது அறைக்கு சென்றுள்ளார். அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு அங்கு பணியில் இருந்த போலீசார், அவரது அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீஜன் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீஜனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ஸ்ரீஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  

இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கும், சிஆர்பிஎப் உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக ஸ்ரீஜன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். இதற்கிடையே அவரது அலுவலக அறையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல. சொந்த பிரச்னை காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக அதில் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. துணை கமாண்டன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : deputy commandant ,Poonamallee CRPF ,gunman ,Poonamallee , CRPF Deputy Commandant, shot dead, suicide, Poonamallee
× RELATED தப்ப முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது போலீஸ்!