மும்பை: போதை பொருள் வழக்கில் ஒரேநாளில் மும்பையில் நடிகை ரியா சக்கரபர்த்தியும், பெங்களூருவில் நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து மும்பை போலீசிடம் இருந்து சிபிஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுஷாந்த் சாவில் அவருடைய காதலியான நடிகை ரியா சக்கரபர்த்திக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து ரியா சக்கரபர்த்தி ரூ.15 கோடி அளவுக்கு பணம் எடுத்து மோசடி செய்ததாக சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் அளித்த புகாரின் பேரில் ரியாவிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும், நடிகை ரியா போதை பொருள் வாங்கியதாகவும் வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் விசாரடண நடத்தினர். அப்போது தான் போதை பொருள் பயன்படுத்துவதில்லை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்காக வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ரியாவின் தம்பி ஷோவிக் சக்கரபர்த்தி, சுஷாந்தின் மானேஜர் சாமுவெல் மிரண்டா உட்பட சிலரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், ரியாவிடம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 3வது நாளான நேற்று விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்தனர். இன்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. ரியாவை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்ற போது வெளியில் கூடி இருந்தவர்களை பார்த்து அவர் டாடா காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல், பெங்களூருவில் சிக்்கிய போதை கடத்தல் கும்பலுடன் சேர்ந்து செயல்பட்ட குற்றத்துக்காக பிரபல நடிகை ராகிணி திவேதி சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இந்த கும்பலுடன் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால், பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது.