×

நாற்று நடும் வயல்போல் காட்சியளிக்கும் சாலை: காளையார்கோவில் அருகே மக்கள் அவதி

காளையார்கோவில்:  காளையார்கோவில் அருகே காட்டாத்தி வழியாக பள்ளித்தம்மத்திற்கு செல்லும் சாலை வேம்பனி, அம்மாபட்டி, உருவாட்டி என பல கிராமமக்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இங்குள்ள மாணவ- மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இங்கு விளையும் காய்கறிகள் மற்றும் விவசாயத்திற்கான ஈடு பொருட்களை ஏற்றி செல்வதற்கு அதிகளவில் இச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்குள்ள உருவாட்டி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக கிடக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பாதங்களை பதம் பார்த்து வருகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் பல இடங்களில் சேறும், சகதியுமாகவே காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் தினம், தினம் விபத்துகளை சந்திக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மழை பெய்து வருவதால் சாலை நாற்று நடும் வயல்வெளி போல் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இச்சாலையை புதுப்பிக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். சில முறை அமைச்சரிடமே மனு கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே, புதிய தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Road ,Kaliningrad ,Field ,Kalaiyar Kovil , Kalaiyar Kovil, Road, Field
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி