×

கடந்த 3 மாதங்களாக இந்தியா - சீனா எல்லையில் பதற்றம்: மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை.!!!

டெல்லி: இந்தியா - சீனா இடையே எல்லையில் கடந்த 3 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று இரவு பாங் கோங் த்சோ என்னும் பனி ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலையோரத்தில் இரு நாட்டு வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்திய ராணுவத்தினரே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்து பாங் கோங் த்சோ ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலைபகுதிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட தொடங்கியதாகவும், சீன வீரர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது திடீரென தாக்கத் தொடங்கிவிட்டதால், நிலைமையை கட்டுப்படுத்த வேற வழியின்றி பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சீன ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.  

இந்திய ராணுவத்தின் செயல், மோசமான ஆத்திரமூட்டும் செயல்பாடு என விமர்சித்துள்ள சீன ராணுவம், இத்தகைய ஆபத்தான செயல்களை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் எனவும் கூறியுள்ளது. சீன ராணுவத்தின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், கட்டுப்பாட்டு எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், படைகளை குறைக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது. சீனா தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எந்த கட்டத்திலும் இந்திய இராணுவம் எல்.ஐ.சி முழுவதும் மீறவில்லை, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்தவொரு ஆக்கிரமிப்பு வழிகளையும் பயன்படுத்தவில்லை.

இந்திய ராணுவம் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லும் சீனவின் அறிக்கை அவர்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும் இராணுவ, இராஜதந்திர மற்றும் அரசியல் மட்டத்தில் ஈடுபாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பி.எல்.ஏ தான் ஒப்பந்தங்களை அப்பட்டமாக மீறி ஆக்கிரமிப்பு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று விளக்கம் அளித்தது.

இந்நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தேசிய ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை எல்லை பிரச்சனைகளை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் எடுத்துரைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Modi ,border ,India ,China ,ministers ,Union ,Union Ministers , Tensions on India-China border for last 3 months: Prime Minister Modi consults with Union Ministers and officials this evening. !!!
× RELATED மோடி மீண்டும் வரக்கூடாது;...